search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரல் பரிசோதனை"

    ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என்றும், குரல் பரிசோதனைக்கு தயாராக இருப்பதாகவும், வழக்கு தொடரப் போவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar
    சென்னை:

    ‘மீடூ’ விவகாரம் ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், அவரது கருக்கலைப்பு தொடர்பாக அந்த பெண்ணின் தாயாருடன் அவர் பேசும் ஆடியோ இது தான் என்றும் சமூக வலைதளங்களில் நேற்று ஒலிநாடா ஒன்று பரபரப்பாக சுற்றி வந்தது.

    ஆனால், இதை அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக மறுத்தார். இந்த விஷயம் தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை நான் கடுமையாக எதிர்க்கும் காரணத்தினால் என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எப்படியாவது களங்கம் கற்பிக்கவேண்டும் என்ற வகையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாகவே ஒரு நட்சத்திர ஓட்டலில் நான் யாருடனோ இருப்பது போன்று போலியான புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டார்கள். பேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் பரப்பினார்கள். அது உடனடியாக என் கவனத்துக்கு வந்து, சைபர் கிரைமில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    அதில் தோல்வியடைந்தவர்கள் அந்த குடும்பத்தை நான் முழுமையாக எதிர்க்கின்ற காரணத்தால், என்னை நேரடியாக எதிர்க்கின்ற திராணி இல்லாதவர்கள், ஒரு ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இப்போது தொழில்நுட்பம் எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். வீடியோவிலேயே போலியான ஆள் ஒருவர் இருப்பது போன்று செய்யலாம். ஆடியோவிலும் போலியாக பேசுவது போன்று செய்யலாம். அப்படி ஆடியோவை போலியாக சித்தரித்து வாட்ஸ்-அப்பில் பரப்பியிருக்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

    இதன் பின்னணியில் யார், யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் சட்டத்தின் முன் பதில் சொல்லவேண்டியவர்கள். எனவே, சட்டப்படி அதனை எதிர்கொள்வதற்கு நானும் தயாராக இருக்கிறேன். வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் போட்டவர்கள் நிச்சயம் அந்த கும்பல் தான். தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் கொடுக்கும்போது என்னிடம் ஒரு ஆடியோ இருக்கிறது என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். போலியாக தயாரித்திருக்கிறார்கள். மிகவும் கெட்டிக்காரர்கள்.

    அந்த கூட்டமே ஒரு மோசடி மற்றும் ஏமாற்றும் கூட்டம். அப்படி இருக்கும்போது இது அவர்களுக்கு கைவந்த கலை. இதற்கு எல்லாம் அஞ்சுகிறவர்கள் நாங்கள் அல்ல. சிங்கங்கள். எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டத்தின் மூலம் நாங்கள் எதிர்கொள்வோம். அதற்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- நீங்கள் வழக்கு தொடருவீர்களா?

    பதில்:- நிச்சயமாக வழக்கு தொடருவேன். போலீசில் புகாரும் கொடுப்பேன்.

    கேள்வி:- இந்த விவகாரத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?

    பதில்:- வெளிப்படையாக சசிகலாவின் குடும்பத்தினர் தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் சார்ந்தவர்கள், அவர் தான் மாபியா கும்பலே... அவர்கள் குடும்பத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எதிர்க்கிறேன் என்றால் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.வினரின் உணர்வு, எண்ணம் மற்றும் குரல்களை பிரதிபலிக்கின்றேன். அதனால் என் மீது அவதூறு பரப்பும் வகையில் இதுபோன்ற ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இதற்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

    கேள்வி:- ஆடியோவில் உள்ளது போன்று நீங்கள் யாரிடமும் பேசியதே கிடையாதா?

    பதில்:- கிடையவே கிடையாது. சவாலாக சொல்கிறேன் இப்படி நான் பேசியதே கிடையாது.

    கேள்வி:- பிறப்பு சான்றிதழில் உங்கள் பெயர் போடப்பட்டிருக்கிறதே?.

    பதில்:- உங்கள் (செய்தியாளர்) பெயர் கூட அதில் போடலாம். என்னுடைய கையெழுத்தா அதில் இருக்கிறது? டி.ஜெயக்குமார் என்று நான் ஒருத்தானா இருக்கிறேன்? இது ஒரு திட்டமிட்ட சதி. இதுபோன்ற சதிகளை நான் 1982-ம் ஆண்டில் இருந்தே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இது ஒரு விஷயம் கிடையாது.

    கேள்வி:- ஆடியோ விவகாரத்தில் பரிசோதனைக்கு நீங்கள் தயாரா?

    பதில்:- நான் 100 சதவீதம் தயாராகத்தான் இருக்கிறேன்.

    கேள்வி:- எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இழுக்க பார்ப்பதால் டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட உள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்:- மறைந்திருந்து கிரிமினல் வேலைகளை செய்வதில் டி.டி.வி.தினகரனுக்கு நிகர் டி.டி.வி.தினகரன் தான். எங்கு மறைத்து வைத்தாலும் சரி, சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம் நிற்குமா? கண்டிப்பாக நிற்காது. அ.தி.மு.க. அரசை காப்பாற்றுவதற்கு கண்டிப்பாக அந்த 18 பேரும் திரும்புவார்கள். மறைத்து வைக்கலாம் ஆனால் அது நடக்காத காரியம். சசிகலாவை ஜெயிலில் பார்ப்பதற்கு ‘டோக்கன் செல்வன்’ சென்றிருக்கிறார். முன்னோட்டமாக அங்கு நானும் வருகிறேன் என்று சொல்வதற்கு தான் சென்றிருக்கிறார்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார். #MinisterJayakumar
    பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ஆடியோவில் உள்ள குரல் அவருடையதுதானா? என்று அறிவதற்காக குரல் பரிசோதனைக்காக நேற்று அவர் சென்னை அழைத்துவரப்பட்டார். #NirmalaDevei
    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16-ந் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ‘செல்போன்’ உரையாடல் அவருடைய குரல் தானா? என்று பரிசோதனை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி நிர்மலாதேவிக்கு சென்னை தடய அறிவியல் அலுவலகத்தில் குரல் பரிசோதனை செய்வதற்காக ஐகோர்ட்டு மதுரை கிளையில் போலீசார் அனுமதி பெற்றனர். இதற்காக நிர்மலாதேவியை ஜூன் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் சென்னை அழைத்துச்செல்வதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதையடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலாதேவியை தனி வேன் மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மாலை சென்னை அழைத்துவந்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே உள்ள தடயவியல் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட உள்ளார். அங்கு அவருடைய குரல் பரிசோதனை நடைபெற உள்ளது. அப்போது அவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தபோது, என்ன பேசினாரோ? அதை அப்படியே சிலமுறை பேசச்சொல்லி, தடய அறிவியல் நிபுணர்கள் ஆடியோவில் பதிவு செய்வார்கள்.

    அதன்பின்னர் நிர்மலாதேவி ஏற்கனவே பேசி வெளியான செல்போன் உரையாடலுடன், தற்போது பதிவு செய்யப்பட்ட உரையாடலை ஒப்பிட்டுப்பார்த்து சோதனை மேற்கொள்ளப்படும்.

    இந்த சோதனை முடிந்தவுடன் நிர்மலாதேவியை மீண்டும் தனி வேன் மூலம் மதுரை மத்திய சிறைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து செல்ல உள்ளனர்.  #NirmalaDevei
    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு குரல் மாதிரி சோதனை நடத்த இன்று காலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலாதேவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய மதுரை ஐகோர்ட்டு கிளை குரல் மாதிரி பரிசோதனையை நடத்த உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து நிர்மலாதேவிக்கு குரல் மாதிரி சோதனை நடத்த இன்று காலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

    நாளை (28-ந் தேதி) அவருக்கு மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துணை இயக்குநர் முன் குரல் பரிசோதனை எடுக்கப்பட உள்ளது. இந்த சோதனை முடிந்தபின் நாளை மறுநாள் நிர்மலாதேவி மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுவார்.

    குரல் மாதிரி பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின் மதுரை ஐகோர்ட்டு கிளையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதனை தாக்கல் செய்ய உள்ளனர்.

    குரல் பரிசோதனைக்காக நிர்மலாதேவியை சென்னைக்கு அழைத்துச்செல்ல மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
    மதுரை:

    குரல் பரிசோதனைக்காக நிர்மலாதேவியை சென்னைக்கு அழைத்துச்செல்ல மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக தொலைபேசியில் பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானது.

    இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நிர்மலாதேவிக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்ய மதுரையில் உரிய வசதி இல்லாததால், அவரை சென்னைக்கு அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    அந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணை முடிவில், நிர்மலாதேவியை குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை அழைத்துச் செல்வதற்கு வருகிற 27-ந்தேதி (நாளை) முதல் 29-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 
    மதுரை மத்திய சிறையில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு குரல் பரிசோதனை நடத்த, விருதுநகர் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி, தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நேற்று முன்தினம் அவர் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலா தேவியின் குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீது விசாரணை நடத்த, நிர்மலாதேவியை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று மதியம் நிர்மலாதேவி மீண்டும் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது, நிர்மலாதேவிக்கு இம்மாதம் 21-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    அத்துடன் அவரது குரல் மாதிரி பரிசோதனையை, மதுரை மத்திய சிறையில் வைத்து நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து, போலீசார், நிர்மலாதேவியை மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×